இலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும்: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அரசுக்கு பரிந்துரை

தினகரன்  தினகரன்
இலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும்: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அரசுக்கு பரிந்துரை

கொழும்பு: இலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அவற்றில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க எம்.பி. மலித் ஜெயதிலகா தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. நாட்டில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு இக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இக்குழு தனது ஆய்வை முடித்துள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை அளித்துள்ள இந்த குழு, அதில் 14 விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு, இலங்கையில் பர்தா உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். முக மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். மத, இன மோதல்களை உண்டாக்கும் பெயருடன் கூடிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். அத்தகைய அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சியாகவோ, மதம் சாராத அரசியல் கட்சியாகவோ மாற்றப்பட வேண்டும். மதரசாக்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும். அதுபோல், மதரசாக்களை ஒழுங்குபடுத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை