மகா சிவராத்திரி கொண்டாட்டம்:குமரியில் சிவாலய ஓட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகா சிவராத்திரி கொண்டாட்டம்:குமரியில் சிவாலய ஓட்டம்

நாகர்கோவில்: நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை நடந்தும், ஓடியும் சென்று பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி அன்று மாத சிவராத்திரி ஆகும். இதில் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

இது சிவனுக்குரிய விரதமாகும். இந்த நாளில் கண் விழித்திருந்து சிவபெருமானை தரிசனம் செய்தால், நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

அதன்படி இன்று மாசி மாத மகா சிவராத்திரி ஆகும்.

இதையொட்டி இன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த நாளில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை பக்தர்கள் மாலை அணிந்து, நோன்பு இருந்து ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். இன்று சிவராத்திரியையொட்டி, முதல் சிவாலயமான புதுக்கடை அருகே முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

காவி வேட்டி, இடுப்பில் துண்டு, கையில் விசிறி, சுருக்கு பையில் விபூதி ஆகியவற்றுடன் திருமலை மகாதேவரை தரிசித்து விட்டு, ‘கோவிந்தா. கோபாலா. . . ’ என்று கோஷமிட்டவாறு பாதயாத்திரையாகவும், ஓடியும் தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.

வழியெங்கும் கோவிந்தா, கோபாலா என்ற முழக்கத்துடன் சிவாலயங்களை நோக்கி பயணித்தனர்.

திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில், பந்நிப்பாகம் சந்திர மவுலீஸ்வரர் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் கோயில், திருவிடைக்கோடு சடையப்ப நாதர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களுக்கு பகல் மற்றும் இரவில் ஓடியும், நடந்தும் தரிசிக்கும் பக்தர்கள், இன்று இரவு 12வது சிவாலயமான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில், தங்களது பயணத்தை நிறைவு செய்கிறார்கள். இன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை தரிசிக்கும் பக்தர்கள், நாளை அதிகாலை தங்களது விரதத்தை நிறைவு செய்து வீடு திரும்புவார்கள்.

நடை பயணமாக வந்த பக்தர்கள் மட்டுமின்றி, இன்று அதிகாலை முதல் பைக், கார்களில் சென்று 12 சிவாலயங்களை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரண்டனர்.

12 சிவாலயங்களிலும் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழிநெடுக சிவாலய பக்தர்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள் உள்ளிட்டவை பொதுமக்களால் வழங்கப்பட்டன.

இது தவிர இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. இரவு 10 மணிக்கு தொடங்கும் பூஜைகள், நாளை அதிகாலை 2 மணியளவில் நிறைவடைகின்றன.

சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை