தமிழக சட்டப்பேரவையில் காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு சட்ட முன்வடிவு நிறைவேற்றம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக சட்டப்பேரவையில் காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு சட்ட முன்வடிவு நிறைவேற்றம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்

சென்னை: காவிரி வேளாண் நிலங்களை பாதுகாக்க சட்ட முன்வடிவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். பின்னர் அது நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், தமிழ்நாடு மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான ஒரு சட்ட முன்வடிவினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
இந்த மசோதாவின்படி துத்தநாக உருக்காலை இரும்புத்தாது செயல்முறை ஆலை.

ஒருங்கிணைந்த எக்கு ஆலை, அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளடங்கலான இயற்கை எரிவாயு ஆய்வு, பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை,  ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடையானது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, பகீரபாளையம், பரங்கிப்பேட்டை வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கறம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்தத் தடை பொருந்தும். அதேசமயம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகாது.

இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப் படுகிறது. முதலமைச்சரை தலைவராகக் கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 13 உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அதிகார அமைப்பு செயல்படும்.



இது தனி அதிகார அமைப்பாகும். இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படுகிறது.

இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் மிகாமல் ஆறு மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்படும். 50 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.

.

மூலக்கதை