செங்குன்றம் அருகே பரபரப்பு: கெமிக்கல், மர குடோன் எரிந்தது
புழல்: செங்குன்றம் அருகே கெமிக்கல் கம்பெனி, மர குடோன் தீப்பிடித்து எரிந்தது. சென்னை செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை நகர், வடபெரும்பாக்கம் செட்டிமேடு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல், ஆயில் மில் கம்பெனிகள் மற்றும் மர குடோன்கள் இயங்கி வருகின்றன.
நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள கெமிக்கல் கம்பெனியில் நேற்றிரவு 9 மணியளவில் தீ விபத் ஏற்பட்டது.
வேலை செய்தவர்களால் தீயை அணைக்க முடியாமல் வேகமாக பரவியது. இதனால் கெமிக்கல் கம்பெனிக்கு அருகில் உள்ள தனியார் மர குடோனுக்கும் தீ பரவியதால், 2 கட்டிடங்களிலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
கெமிக்கல் ஆலையில் இருந்த பொருட்கள் மற்றும் குடோனில் இருந்த மரங்கள் தீப்பிடித்து வெடித்து சிதறின.
இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் மற்றும் செங்குன்றம், மாதவரம், மணலி, செம்பியம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்துவந்து இன்று காலை 5 மணிவரை போராடி கெமிக்கல் கம்பெனி மற்றும் மர குடோனில் பற்றிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் கெமிக்கல் கம்பெனி மற்றும் மர குடோனில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
.