குண்டு பெண்ணே என கேலி செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை: குன்றத்தூர் அருகே சோகம்
குன்றத்தூர்: சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி காயத்ரி.
இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் விஸ்வநாதன், மகள் பூஜா (20) இதில் கணேசும், விஸ்வநாதனும் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் தாய் காயத்ரியுடன் வசித்துவரும் பூஜா, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வந்தார். மிகவும் குண்டாக இருந்ததால் பூஜா, உடல் எடையை குறைக்க முயற்சி மேற்கொண்டார்.
இருப்பினும் அவரது உடல் எடை குறையவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.
நேற்று காலை காயத்ரி வேலைக்கு சென்றும் வீட்டில் தனியாக இருந்த பூஜா தனது உடல்பருமன் குறித்து நினைத்து வருத்தப்பட்டுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த பூஜா, தாம்பரத்தில் உள்ள நண்பருக்கு போன் செய்து, தான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நண்பர் இந்த தகவலை பூஜாவின் தாயாருக்கு தெரிவித்தார். இதனால் பதற்றம் அடைந்த தாய், உடனடியாக வீட்டுக்கு வந்தார்.
அப்போது படுக்கை அறையில் பூஜா தூக்கில் பிணமாக கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பூஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.