சாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்?: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
சாம்பல் பட்டியலில் நீடிக்குமா பாகிஸ்தான்?: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க FATF வலியுறுத்தல்

பாரீஸ்: தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF  வலியுறுத்தியுள்ளது. உலக நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பின் (எப்.ஏ.டி.எப்.) மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாரிஸில் தொடங்கியது. இந்த  மாநாட்டில் பயங்கரவாத மற்றும் குற்ற செயல் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான்  மற்றும் ஈரானுக்கான இடர் தரவரிசை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த  27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க  வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி அந்நாட்டை கருப்பு பட்டியலில் எப்.ஏ.டி.எப். சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் இந்தியாவும் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டது. கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டால் அந்நாட்டுக்கு  எதிராக புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும். ஆனால் துருக்கி மற்றும் மலேசியா நாடுகளின் ஆதரவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதிலிருந்து  பாகிஸ்தான் தப்பித்தது.இதனையடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து எப்.ஏ.டி.எப்.-ன் சாம்பல் பட்டியலில் நீடிக்கிறது. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவு வரும் வெள்ளிக்கிழமையன்று  எப்.ஏ.டி.எப். எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் இந்த முறை தப்பித்தாலும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சாம்பல் பட்டியலில்  இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் இல்லையென்றால் தானாகவே கருப்பு பட்டியலில் இணைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை