'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
கோவிட்19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004ஆக அதிகரிப்பு

சீனா: கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் 74,185ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களாக புதிதாக நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மட்டுப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென்று அது பல மடங்கு உயர்ந்ததற்கு நோய் இருப்பதை உறுதி செய்யப் பயன்படுத்தும் அளவு கோல் விரிவாக மாற்றப்பட்டுள்ளதே காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் சிக்கியுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் என்னும் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மக்களின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். ஆனால் டாக்டர்களே கொரோனாவுக்கு பலியாவது மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது. அந்த வகையில், வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் காலமானார். இவர் கொரோனா வைரசை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக போராடி வந்துள்ளார்.இவர் இறந்த தகவலை கூட சீன அரசு மிக தாமதமாகவே அறிவித்தது. ஏற்கனவே கொரோனா பற்றி முதல் முதலில் தகவல் தெரிவித்த டாக்டர் லி வென்லியாங் வைரஸ் பாதிப்பால் இறந்த போது கூட அதை சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைத்தது. இதனால் வென்லியாங் மரணத்தை போலவே ஜிமிங் மரண செய்தி விஷயத்திலும் சீன அரசை அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கொரோனாவுக்கு பலியாகும் 2வது மூத்த டாக்டர் ஜிமிங் ஆவார். அவரது மறைவுக்கு சீன அரசும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, வைரஸ் தொற்றால் 6 மருத்துவ பணியாளர்கள் இறந்துள்ளனர். 1,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வுகானில் டாக்டர்களுக்கு தேவையான மாஸ்க், உடல் முழுவதும் போர்த்திய ஆடைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அவரது ஷிப்ட் முடிந்ததும் அடுத்தவர் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதோடு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையும் அங்கு ஏற்பட்டுள்ளது.வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. வைரஸ் அறிகுறியுடன் வீட்டில் பதுங்கியிருப்பவர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்து வரப்படுகின்றனர். அதோடு, மெடிக்கல் ஷாப் மற்றும் ஆன்லைனில் காய்ச்சல் மருந்து வாங்குபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சன் விடோங் முன்னதாக அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதேபோல் வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரசுக்கு எதிரான சண்டையில் சீனா நிச்சயம் வெற்றி பெறும். வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு 80,000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சீனாவிடம் வைரசுக்கு எதிராக போராடுவதற்கான அனைத்து வளங்களும் உள்ளது என கூறியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை