டிஎன்பிஎஸ்சி உள்ளிட்டவற்றில் முறைகேடு எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்டவற்றில் முறைகேடு எதிரொலி: சிபிஎஸ்இ தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்

சென்னை: தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் பொதுத் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்புகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்  தேர்வு எழுதுகின்றனர்.

புது நடைமுறையாக இந்த ஆண்டு முதல் பொதுப் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி(சனிக்கிழமை)யன்று தொடங்கின. சிபிஎஸ்இ தேர்வுகளில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பிரச்னை எழுவது வழக்கம், கேள்விகள் முன்கூட்டியே வெளியாவது, விடைத்தாள் திருத்துவதில் பிரச்னைகள் என்பன வழக்கமாக இருந்தது.

அது போன்ற பிரச்னைகள் எழாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், கேள்வித்தாளில் சில மாற்றங்கள் என்று பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ செய்துள்ளது.

விடைத்தாளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கேள்வித்தாளை பொறுத்தவரையில் புது மாற்றமாக கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்ட கேள்வித்தாளில் வலப்பக்கம் ஆங்கிலத்திலும், இடப்பக்கத்தில் இந்தியிலும் கேள்விகள் இடம் பெற்று இருந்தன. விடைத்தாளை பொறுத்தவரையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, முதல் பக்கத்தில் ஓஎம்ஆர் ஷீட்கள் இணைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

மாணவர்களின் பதிவு எண்கள் 7 டிஜிட்டுக்கு பதிலாக 8 டிஜிட்டில் வழங்கப்பட்டன. அத்துடன் அந்த எண்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதும் விடைத்தாளின் மறுபக்கத்தில் அச்சிட்டு வழங்கப்பட்டன.



அனைத்து தேர்வு அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வுக் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவே தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

இதையடுத்து பிப்ரவரி 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.


.

மூலக்கதை