சீருடை பணியாளர்கள் தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீருடை பணியாளர்கள் தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவல்துறையில் 2ம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019, மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.

பின்னர், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, கடந்த 2ம் தேதி, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் ‘சிகரம்’ என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.



இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடை பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாலும், மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

.

மூலக்கதை