ஆவடி அருகே சோகம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆவடி அருகே சோகம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி.

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (23).

இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. கலாசரண் (3), நிஷாத் (1) என்ற மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு முத்துமாரிக்கும், விஜயலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மனம் உடைந்த விஜயலட்சுமி, தனது 2 மகன்களுடன், வீட்டை விட்டு வெளியேறினார்.

அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை.

வெகு நேரமாக வராததால், அதிர்ச்சியடைந்த முத்துமாரி, அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில், ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலைய பகுதியில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு விஜயலட்சுமி, கலாசரண், நிஷாத் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முத்துமாரியும், விரைந்து சென்று மனைவி மற்றும் மகன்களின் சடலங்களை பார்த்து கதறி அழுதார்.

3 பேரின் சடலங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி முருகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத்தான் 2 மகன்களுடன் விஜயலட்சுமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை