அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி, தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.

மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டு சிறை, 9 பேருக்கு 5 ஆண்டுசிறை தண்டனைவிதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பை ரத்து செய்ய கோரி, 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்தார்.

மனுவில்,  எலக்ட்ரீசியனாக உள்ள என்னை, குற்றப்பத்திரிக்கையில், பிளம்பர் என குறிப்பிட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்  பெறவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து இருக்க வேண்டும்.

எனக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையான 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தண்டனையை நிறுத்தி வைத்து எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

.

மூலக்கதை