கதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

தினகரன்  தினகரன்
கதிகலங்கி நிற்கும் சீன அரசு...கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

சீனா: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், சீனாவில் 75 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றக் கூட்டத்தை ரத்து செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. கொடூரமான கொரோனா வைரஸால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. தற்போதைய தகவலின்படி ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 73 ஆயிரத்து 332 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 795 பேர் கவலைக்கிடமாக உயிருக்குப் போராடி வருகின்றனர்.கொரோனாவின் தாக்கம் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளதால் அதற்கான மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் அதற்கான ஆயத்தப் பணியில் மும்முரமாக உள்ளன. கொரோனோவின் பிறப்பிடமான வூகானில் குடும்பத்தில் ஒருவருக்கு என்ற ரீதியில் பெரும்பாலான மக்கள் அந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சீனாவிற்கு இன்பச் சுற்றுலா சென்றவர்களின் பயணம் துன்பகரமாக மாறியுள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரோபோக்களை பயன்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குவதற்கு ரோபோக்களைப் பயன்படுத்தியுள்ள சீன அரசு,  தற்போது கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வகைகளையும் வழங்குவற்கும் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் கொடூர தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்த கூட்டத்தை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, மேலும் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டால் அது வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை