திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை

சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இனி  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஏற்கனவே லட்டு  எடுத்துச் செல்வதற்கு சணல் பை மற்றும் பேப்பர் அட்டை பெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு வீசக்கூடிய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பெரும் சவாலாக மாறியது. இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் தங்கும் அறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடைகளில் மற்றும் ஹோட்டல்களில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிருத்தப்பட்டது. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்களுக்காக கண்ணாடி பாட்டில்களில் குடி தண்ணீர் விற்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான சுகாதார அலுவலர் ஆர்.ஆர். ரெட்டி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்  புனிதமான திருமலையில் சுகாதாரமாக வைத்திருப்பதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்க்கு கடந்த சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துவதற்கு மண் குடுவை, செம்பு மற்றும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு நிறுவனம் ரூபாய் 40 விலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். இன்று சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. இதனை சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சோதனை முடிவுகள் வந்த பிறகு விரைவில் சில நாட்களில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த கண்ணாடி பாட்டிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பக்தர்கள் ரூபாய் 40 கொடுத்து ஒரு லிட்டர் கண்ணாடி பாட்டிலில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் தண்ணீரை குடித்து விட்டு அவர்கள் இங்கிருந்து செல்லும் பொழுது மீண்டும் அந்த பாட்டிலை திரும்பக் கொடுத்தால் 20 ரூபாய் மீண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும் என தண்ணீர் பாட்டில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் திருமலையில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் ஏற்பட்டு வந்த சுற்றுச்சூழல் மாசு முற்றிலும் தடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மூலக்கதை