டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்

தினகரன்  தினகரன்
டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது: சிவசேனா சாடல்

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அமெரிக்க அதிபரான பிறகு, அவர் இந்தியா வருவதே இதுவே முதல் முறை. எனவே, அவருடைய வருகையை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 24ம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில், அவரை கவரும் வகையில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது, குஜராத்தில் ஆகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் ஒன்றை மாநகராட்சி கட்டி வருகிறது. ஆமதாபாத்தில் இருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் கட்டப்படுகிறது. டிரம்ப் வருகைக்காக தடபுடல் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. டிரம்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல உள்ளது. சுதந்திரத்திற்கு முன் பிரிட்டன் அரசர் அல்லது ராணி, இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதைப் போன்றே உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமை இருந்தது என்ற கோஷத்தை முன் வைத்தார். இந்திரா காந்தியின் கோஷம் நீண்ட நாட்களுக்கு ஏளனம் செய்யப்பட்டது. தற்போது, மோடி வறுமையை மறைப்பது போல தெரிகிறது. அகமதாபாத்தில் இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு எதும் செய்யப்பட்டதா? நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? டிரம்ப், அகமதாபாத்திற்கு வெறும் 3 மணி நேரம் மட்டுமே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை