காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..!: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது..!: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பேட்டி

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் நான்கு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கட்டர்ஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் பிரச்சனை மிகவும் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச முயற்சிக்கு தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது ஐநா பொதுச்செயலாளரின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியறவு அமைச்சகர் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் சமரசத்தை ஏற்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார். காஷ்மீர் பற்றி பேசும் போது பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் சேர்த்து பேச வேண்டும் என்றும் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, எல்லை தாண்டி வரும் தீவிரவாதத்தால் ஜம்மு காஷ்மீர் உள்பட இந்தியாவுக்கே அதன் அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐநா பொதுச்செயலாளர் அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பலமுறை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரச முயற்சியை குறித்து பேசிய போதும் இந்தியா அதனை ஏற்க மறுத்துவிட்டது. அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகள் காஷ்மீர் குறித்து பேசும் போது இந்தியாவின் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை