முதல்வருக்கு நன்றி சொல்லும் திவ்யா சத்யராஜ்

தினமலர்  தினமலர்
முதல்வருக்கு நன்றி சொல்லும் திவ்யா சத்யராஜ்

அட்சய பாத்திரா என்ற சமூக அமைப்பின் விளம்பரத் தூதராக இருந்து செயல்படுபவர் திவ்யா சந்யராஜ். இந்த நிறுவனம் சார்பாக, சமூகத்தின் பின் தங்கிய நிலையில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ், இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருப்பதால், இந்தத் திட்டத்துக்காக அரசு சார்பில் தேவைப்படும் உதவிகளுக்காக, கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை அணுகினார்.


தங்களுடைய நிறுவனத்தின் சார்பில், சென்னை புறநகரில் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவளிக்கும் திட்டத்துக்காக, மிகப் பெரிய சமையல் கூடம் ஒன்று இருக்கிறது. அதே போல, சென்னை மாநகரத்துக்குள்ளும் ஒரு சமையல் கூடம் அமைக்க வேண்டும். அதற்கான அனுமதியையும், சமையல் கூடத்தையும் அரசு சார்பில் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த விஷயத்தை முதல்வர் பழனிச்சாமியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் அமைச்சர் செங்கோட்டையன். சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில், மாநகர எல்லைக்குள்ளான சமையல் கூடத்தை அமைத்துத்தர உத்தரவிட்டார். இதையடுத்து, ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு இடம் வாங்கப்பட்டு, அதை குழந்தைகளுக்கான சமையல் தயாரிக்கும் கூடமாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி.

இதையடுத்து, குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உடனடியாக அனுமதி அளித்து, சமையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல்லும் நாட்டிய முதல்வர் பழனிச்சாமிக்கும், இதற்கு உறுதுணையாக இருந்து ஏற்பாடு செய்த கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார் திவ்யா சத்யராஜ்.

மூலக்கதை