புதிய சாதனை உயரத்தில் அன்னிய செலாவணி இருப்பு

தினமலர்  தினமலர்
புதிய சாதனை உயரத்தில் அன்னிய செலாவணி இருப்பு

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்தில் அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி, 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனை உயரத்தை தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 33.58 லட்சம் கோடி ரூபாய். சமீப காலமாகவே தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


அந்த வரிசையில், கடந்த வாரத்திலும் அதிகரித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 170 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, ஒரு புதிய சாதனை அளவாகும்.


இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 461 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 130 கோடி டாலராக உயர்ந்திருந்தது.மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 193.8 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 919 கோடி டாலராக உள்ளது. மேலும், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 21.8 கோடி டாலர் அளவுக்கு குறைந்து, 2,878 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.04 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை