சந்திரபாபுவின் தனி செயலாளர் வீடு, ஆபீஸ்களில் சோதனை: ரூ.2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சந்திரபாபுவின் தனி செயலாளர் வீடு, ஆபீஸ்களில் சோதனை: ரூ.2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தனி செயலாளர் வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஐடி நடத்திய சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ. 1. 5 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இருந்தபோது அவருக்கு தனிச் செயலாளராக இருந்தவர் ஸ்ரீநிவாஸ்.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 6ம்தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் ஸ்ரீநிவாஸ் வசிக்கும் விஜயவாடா வீடு மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் செயல்படும் 3 பிரபல கட்டுமான நிறுவனங்களின் ஐதராபாத், கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி, பூனா ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரு முக்கிய பிரமுகரின் முன்னாள் தனிச் செயலாளர் ஸ்ரீநிவாஸ் வீடு மற்றும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படும் மூன்று முக்கிய கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்கள் ஆகியவற்றில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த கட்டுமான நிறுவனங்கள், சப்-கான்ட்ராக்டர்கள் என்ற பெயரில் போலி கான்ட்ராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தது போல் ஆவணங்களை தயார் செய்தும், முறையான வகையில் கணக்கு வழக்குகளை பராமரிக்காமலும் இருந்தது தெரிந்தது.

மேலும், போலி சப்-கான்ட்ரக்டர்களை முக்கிய கட்டுமான நிறுவனங்களும் நேரடியாக இயக்கியது. அந்த நிறுவனங்களின் ஐபி அட்ரஸ், இ-மெயில் தகவல்கள், வாட்ஸ் அப் தகவல்கள் ஆகியவற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ரூ. 85 லட்சம் ரொக்கம், ரூ. 71 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 25 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை