மேம்பாலம் கட்டியதில் ஊழல் விசாரணைக்கு நாளை ஆஜராக மாஜி அமைச்சருக்கு நோட்டீஸ்: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் இப்ராஹிம் குஞ்சு. 2014ம் ஆண்டு கொச்சி பாலாரி வட்டத்தில் ேமம்பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே பாலத்தின் பல பகுதிகளில் குழிகள் ஏற்பட்டன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதில், பாலம் முறையாக கட்டப்படவில்லை என்றும், சிமென்ட், இரும்பு கம்பி ஆகியவை மிகவும் குறைவான அளவில் சேர்க்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. கடந்த வருடம் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையில் பாலம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்போதைய பொதுப்பணி துறை செயலாளர் சூரஜ் உள்பட 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் இப்ராஹிம் குஞ்சு உத்தரவுபடியே செயல்பட்டதாக கூறினர். இதையடுத்து, இப்ராஹிம் குஞ்சு மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னரிடம் போலீசார் அனுமதி கேட்டனர். அதற்கு கவர்னர் அனுமதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் இப்ராஹிம் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில், அவரிடம் விசாரணை நடத்த, நாளை திருவனந்தபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.