உமர் அப்துல்லா விடுவிப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி திடீர் விலகல்...நாளை மறுநாள் வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உமர் அப்துல்லா விடுவிப்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி திடீர் விலகல்...நாளை மறுநாள் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிப்பு விவகார வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், திடீரென இவ்வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினார். நாளை மறுநாள் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து கடந்த ஆண்டு ஆக. 5ம் தேதி மத்திய பாஜக  நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது.

தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட சிலர் பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வீட்டு சிறைக்குள் அடைப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் மீதும்  பொதுப்பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில், அரசியல் கட்சிகள் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த சட்டத்தில் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்துள்ளார்.

சாரா பைலட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலடின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சந்தான கவுடர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘உமர் அப்துல்லா தொடர்புள்ள வழக்கை விரைந்து விசாரிக்க ேவண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வாதங்களை முன்வைத்த போது குறுக்கிட்ட நீதிபதி சந்தான கவுடர், ‘‘இந்த வழக்கு விசாரணையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்’ என்று திடீரென அறிவித்தார்.


அதையடுத்து, இவ்வழக்கு விசாரணை நாளை மறுநாள் நடக்கும் என்று, மற்ற நீதிபதிகள் அறிவித்தனர்.


.

மூலக்கதை