விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை: திருச்சி தம்பதிகள் உள்பட 8 பேர் சிறையிலடைப்பு...ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை: திருச்சி தம்பதிகள் உள்பட 8 பேர் சிறையிலடைப்பு...ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டம்

திருச்சி: திருச்சியில் குழந்தைகளை விற்ற 2 தம்பதி உள்பட 8 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். குழந்தை விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதுமிருந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

எனவே சிறையில் உள்ள ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சியில் 2 ஆண் குழந்தைகள் பேரம் பேசி விற்கப்பட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலகுழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. விசாரணையில் திருவெறும்பூர் சுருளிகோவில் தெருவை சேர்ந்த டிரைவர் கோவிந்தன்அஸ்வினி தம்பதி கடந்த 3 மாதங்களுக்கு முன் திருவெறும்பூர் காந்தி நகர் புரோக்கர் மூலம் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அஜீம் நடத்திய விசாரணையில், பெட்டவாய்த்தலை காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முருகேசன் மனைவி புவனேஸ்வரி என்பவருக்கு திருச்சி ஜிஹெச்சில் பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க முடியாததால், ஜிஹெச்சில் வேலை பார்த்து வந்த துப்புரவு ஊழியர் வேலம்மாள் (எ) வெண்ணிலா என்பவர் உதவியுடன் கோவிந்தன்அஸ்வினி தம்பதியினர் ரூ. 1லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் புவனேஸ்வரி (42), துப்புரவு ஊழியர் வேலம்மாள் (42), இவருக்கு உதவியாக இருந்த திருவெறும்பூர் சுருளிகோவில் தெரு லூர்துமேரி (55), குழந்தையை வாங்கிய அஸ்வினி (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அஸ்வினியின் கணவர் தலைமறைவானார்.

இதேபோல் திருவெறும்பூர் அடுத்த குவளக்குடியில் வாட்ச்மேன் வேலை செய்துவந்த ராணி(27)தர்மராஜ்(30) தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையை, குழந்தையில்லாமல் இருந்த அவர்களது உறவினர் உப்பிலியபுரம் புதுப்பட்டியை சேர்ந்த குமார்(30)சாரதா(27) தம்பதியினருக்கு குழந்தையை ரூ. 7 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.

குழந்தையை வாங்கிய இரு தரப்பினரும் பரஸ்பரம் செய்துகொண்டதில் குழந்தையை தத்து எடுத்துகொண்டதாக கடன் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொண்டனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 ஆண்கள் உள்பட 8 பேரும் ஜேஎம் 6 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் நேற்றிரவு அடைக்கப்பட்டனர்.

குழந்தை விற்பனை விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதுமிருந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தையை தத்து எடுத்தவர்கள் முறைப்படி ஆவணங்கள் அடிப்படையில் தத்து பெற்றார்களா, பணம் கொடுத்து பெற்றார்களா என்று விசாரிக்கப்படுகிறது. முறைகேடாக தத்து எடுத்தவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   இது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஜிஹெச் பெண் ஊழியரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சிக்கியது எப்படி?

பிரசவத்தின்போது ராணி அரசு ஆஸ்பத்திரியில் தனது பெயரை சிவகாமி, பாலசுப்ரமணியன் என்று பதிவு செய்திருந்தார்.

பெயர் மாற்றி கொடுத்தது பற்றி போலீசார் விசாரித்தபோது. இந்த விவகாரத்தில் நடந்த பிரச்னை வெளிச்சித்துக்கு வந்தது. கர்ப்பிணியான ராணி திருவெறும்பூர் அருகே அரசன்குடி பகுதிக்கு சித்தாள் வேலைக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஷீலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் ராணியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது உள்பட பல உதவிகளை செய்தார். பிரசவ வலி ஏற்பட்டதும் ராணியை அவர்தான் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்துள்ளார்.



அங்கு ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராணிக்கு பிறக்கும் குழந்தையை தனது உறவினர் சிவகாமிக்கு கொடுக்க ஷீலா திட்டமிட்டிருந்தார்.

அதன்படி தான், அரசு ஆஸ்பத்திரியில் ராணியின் பெயர் மாற்றிக்கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறந்த 4 நாளில் குழந்தையை ராணி, உப்பிலியபுரம் புதுப்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு விற்பனை செய்துவிட்டார்.

இதற்காக ராணியின் தாய் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி குழந்தையை விற்றுள்ளார்.

இது ஷீலாவுக்கு தெரிந்ததால், அந்த கோபத்தில் தான் அவர் போலீசுக்கு போன் செய்து காட்டி கொடுத்தது தெரியவந்தது.

.

மூலக்கதை