விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்: அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தகவல்
புதுடெல்லி: மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரிண் ரிஜ்ஜு, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான பதிலில் கூறியதாவது: சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் வகையில், ‘மெரிட்டோரியஸ் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும். அதாவது, ஒலிம்பிக் விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் உலகக் கோப்பை / உலக சாம்பியன்ஷிப் (ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் பிரிவுகளில்)
மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள், குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.
தற்போது, 627 விளையாட்டு வீரர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 12,000 முதல் ரூ. 20,000 வரை மாதம் தோறும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுகின்றனர். விளையாட்டு அமைச்சகம் ‘பண்டிட் தீனதயால் உபாத்யாய் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நல நிதியம்’ மூலம் உதவிகளை செய்து வருகிறது.
அசாதாரண சூழ்நிலைகளில் மற்றும் விளையாட்டு வீரர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, நிதியுதவியும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.