கொரோனா பலியால் பல நாடுகளில் பீதி: என்னாது ஒலிம்பிக் போட்டி ரத்தா?...தலைமை செயல் அதிகாரி விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பலியால் பல நாடுகளில் பீதி: என்னாது ஒலிம்பிக் போட்டி ரத்தா?...தலைமை செயல் அதிகாரி விளக்கம்

டோக்கியோ: சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் 563 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 24,000க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை  முழுமையான பரிசோதனை செய்த பிறகே, அனுமதித்து வருகின்றனர்.

கொரோனா வைரசின் தாக்கத்தால் சீனாவில் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டு  போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சீனாவை தொடர்ந்து அண்டை நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

இந்த வைரசால் வரும் ஜூலை 24ம்  தேதி தொடங்கி ஆக. 9ம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.



இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைமை செயல் அதிகாரி தோஷிரோ முடோ கூறுகையில், “ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ள  சூழலில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவது மிகவும் கவலையாக இருக்கிறது. இதனால், சில ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளும் சீனாவிலிருந்து  வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிம்மதியாக டோக்கியோவில் நடத்தப்படும். ஆனால், எந்த விதத்திலும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பில்லை.

நிலைமையை  கவனித்து வருகிறோம்’’ என்றார்.



.

மூலக்கதை