பெண் வீராங்கனைக்கு பயிற்சி அளிக்க ஆண் பயிற்சியாளர்களுக்கு தடை...அரியானா அமைச்சர் அதிரடி அறிவிப்பு
சண்டிகர்: அரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள் போன்ற பல்வேறு துறை வீரர்கள் நாட்டிற்காக விருதுகளை ெபற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டால்தான், பல்வேறு போட்டிகளில் வெற்ற பெற முடியும்.
ஆனால், தற்போது முன்னாள் ஹாக்கி வீரரான அரியானா விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங், ‘இனிமேல், பெண்கள் பயிற்சியாளர்கள் மட்டுமே அரசு நடத்தும் கல்விக்கூடங்களில், பெண் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். ஆண் பயிற்சியாளர்கள், பெண் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கமாட்டார்கள்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ‘பெண் வீராங்கனைகள் பெண்கள் பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களைக் கொண்டிருந்தால், அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள், அவர்களது குடும்பத்தினரும் மகள்களின் வெளிநாட்டு பயணத்தின் போது கவலையற்று இருப்பர்’ என்று தெரிவித்தார். ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் கிளம்பி உள்ளது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 45 புகார்களில், அவற்றில் 29 பயிற்சியாளர்களுக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் எழுந்ததாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து, இந்த அமைச்சர் இந்த தடை உத்தரவை பிறப்பித்து உள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.