மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை: 2 பேர் உயிரிழப்பு, சிலர் படுகாயம்!

தினகரன்  தினகரன்
மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை: 2 பேர் உயிரிழப்பு, சிலர் படுகாயம்!

முர்ஷிதாபாத்: மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜலங்கி பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சி.ஏ.ஏ பீரோதி நகரிக் மஞ்சா என்ற அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில், பொதுமக்களுடன் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டமானது ஜலங்கியில் உள்ள சாஹேப்நகர் மாக்கெட் நகரில் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தின்போது அங்கு 5 கார்களில் வந்த திரணாமுல் காங்கிரஸின்(டிஎம்சி) வடக்கு ஜலங்கி தொகுதி தலைவர் தோஹிருதீன் மண்டல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அமைதியான வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில், 55 வயதான அனிருத் பிஸ்வாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 17 வயதான சலாவுதீன் ஷேக் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய முர்ஷிதாபாத் மாவட்ட தலைவரும், எம்.பி.யுமான அபு தாஹர் கான், சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிரான அடக்குவதற்கு, எங்கள் கட்சி சார்பில் எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் எங்கள் கட்சி தலைவர்கள் எவரும் ஈடுபடுவதை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். இவ்விகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யுமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசிய ஜலங்கி சட்டமன்ற உறுப்பினர் அப்தர் ரசாக், கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சியை சேர்ந்தவர்கள் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை அவர்கள், போராட்டத்தின் ஒரு பகுதியாக சாஹேப்நகர் மார்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க முயற்சி செய்துள்ளனர். இதன் காரணமாக, சரஸ்வதி பூஜை நடத்த திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கான மாவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த தோஹிருதீன் மண்டல், மார்கெட் பகுதியை விட்டு செல்லுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எங்கள் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர், என கூறியுள்ளார்.

மூலக்கதை