70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு

கென்யா : கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் வெட்டுக் கிளிகள் விவசாயத்தை எப்படி பாழ்ப்படுத்தும் என்பது கூறப்பட்டு இருக்கும். அதை நிஜத்தில் காட்டும் விதமாக கென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில்வெட்டுக் கிளிகள் படையெடுத்து உள்ளன. லோகஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த வெட்டுக் கிளிகள், விளைப்பயிர்களை அசுரத்தனமாக வேட்டையாடுகின்றன. ஏற்கனவே உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவில் மட்டும் சுமார் 200 பில்லியன் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெட்டுக் கிளிகளை மருந்து தெளித்து அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை 71 கோடியே 32 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. எத்தியோப்பியா, சோமாலியாவில் மழை வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு வெட்டுக் கிளிகள் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கும் வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளன. 

மூலக்கதை