வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ஆர். சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை  வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எஸ். எஸ். எல். சி தோல்வி, எஸ். எஸ். எல். சி. தேர்ச்சி,  எச். எஸ். சி. , பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து  ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவி தொகை பெற சென்னை-4.

சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.

விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40  வயதுக்கு உட்டப்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தனியார்  நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுயவேலை வாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்  ரூ. 72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற தகுதி  உடையவர் ஆவர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை 4, சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, உதவி தொகை பெற்று வரும் பயனாளிகள் விண்ணப்பம் சமர்ப்பித்து  ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவி தொகை எண், வங்கி புத்தகம் நகல்  மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை