அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்

தினகரன்  தினகரன்
அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதிபர் ட்ரம்பின், வெளிநாட்டவர் குடியேற்றக் கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை, இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கானோர் முட்டி மோதுவதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை பெறுவது அங்கு பணியாற்றும் ஏராளமான அயல் நாட்டவரில் கனவாக உள்ளது. 2019 ஆம் நிதியாண்டில் விண்ணப்பித்தவர்களில் 8 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த எண்ணிக்கை ஆகும். முந்தைய ஆண்டை விட 9.5 சதவீதம் உயர்வு என அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை தெரிவித்துள்ளது. இது தவிர 5 லட்சத்து 77ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான சட்டபூர்வ கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில்  59 ஆயிரத்து 281 பேருடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 52 ஆயிரத்து 194 பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துள்ளது. முதல் இடத்தில் மெக்சிகோவும் (1.3 லட்சம்), சீனர்கள் (69,600) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மூலக்கதை