அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

தினகரன்  தினகரன்
அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

லக்னோ: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், யாருடைய குடியுரிமையையும் பறிக்க திருத்தப்பட்ட சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது. நாங்கள் எதிர்ப்பால் வளர்க்கப்பட்டோம். எனவே, எதிர்ப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதமாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பலர் அரண்மனை வீடுகளை விட்டு தற்போது குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களுக்கு வீடுகளை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருகிறார். இது தவறா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கிடையில், ராமர்கோயில் கட்டுவதை காங்கிரஸ் ஆட்சி தாமதப்படுத்தி வந்தது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில் அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

மூலக்கதை