ஏழைகளின் பணத்தை எடுத்து செல்வந்தர்களுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி ட்வீட்

தினகரன்  தினகரன்
ஏழைகளின் பணத்தை எடுத்து செல்வந்தர்களுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி ட்வீட்

புதுடெல்லி: ஏழைகளிடம் இருந்து செல்வ வளங்களை பறித்து தமக்கு நண்பர்களாக இருக்கும் பழம்படைத்த பெரும் முதலாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவிகித இடத்தை பிடித்திருக்கும் 95.3 கோடி ஏழை மக்களின் ஒட்டு மொத்த செல்வ வளத்தை விட 1 சதவிகிதம் இருக்கும் இந்திய பணக்கார்களிடம் 4 மடங்கு அளவுக்கு செல்வ வளம் இருப்பதாக ஆக்ஸ்ஃபாம் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உலக மக்கள் தொகையில் 60 சதவீத அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் நிதியை காட்டிலும், வெறும் 2 ஆயிரத்து 153 பணக்காரர்கள் அதிகளவிலான சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் மக்களில் 460 கோடி மக்கள் என்பது 60 சதவீதமாகும். அதேபோல் இந்தியாவில் 2018 - 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 63 கோடீஸ்வரர்கள் அதிக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை மேற்கோள் காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏழைகளிடம் இருந்து செல்வ வளங்களை பறித்து அவரது முதலாளித்துவ நண்பர்களாக இருக்கும் பெரும் முதலாளிகளிடமும், அவர் சார்ந்திருக்கும் சக்திபடைத்த  தரகர்களுக்கும்,  பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 1 சதவிகிதம் மட்டுமே இருக்கும் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ஏழை மக்களின் செல்வ வளத்தை விட 4 மடங்கு அதிகமானது என்றும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை