ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் சட்ட மசோதா: எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம், விவசாயிகள் போராட்டம்

தினகரன்  தினகரன்
ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் சட்ட மசோதா: எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம், விவசாயிகள் போராட்டம்

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது. நிர்வாகத்துக்கு விசாகப்பட்டினம், பேரவைக்கு அமராவதி, நீதித்துறைக்கு கர்னூல் ஆகிய 3 நகரங்களில் தலைநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது. இதனிடையே பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன.தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான மசோதா இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.3 தலைநகரங்கள் அமைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியும், அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளும் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 48 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் அமராவதியில் 7 எஸ்.பி.க்கள் தலைமையில் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை