உத்தரவாத அட்டையை வெளியிட்டு 10 பிரச்னைக்கு தீர்வு: இலவசமாக மின்சாரம், குடிநீர், பஸ், கல்வி..! தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கும் கெஜ்ரிவால்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரவாத அட்டையை வெளியிட்டு 10 பிரச்னைக்கு தீர்வு: இலவசமாக மின்சாரம், குடிநீர், பஸ், கல்வி..! தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கும் கெஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியை பிடிக்க 10 பிரச்னைகள் தொடர்பான உத்தரவாத அட்டையை வெளியிட்டு, அதில் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தலைநகர் டெல்லியில் மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.

இதையடுத்து, வருகிற பிப்ரவரி 8ம் தேதி ஒரேகட்டமாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லியில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரக் கூட்டங்கள் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்? என்பது குறித்த 10 உத்தரவாதங்கள் அடங்கிய ‘உத்தரவாத அட்டை’யை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.

அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். நிலத்தடி கேபிள் மூலம் ஒவ்வொரு வீட்டையும் மின்சாரம் அடைய வழிவகை செய்யப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேர தூய்மையான குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும்.

தற்போது வழங்கப்படும் 20 ஆயிரம் லிட்டர் இலவச குடிநீர் திட்டம் தொடரும்.

டெல்லியின் ஒவ்வொரு குழந்தைக்கும் உலக தரத்தில் கல்வி வழங்கப்படும். அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகள் செய்து தரப்படும்.

பெண்கள், மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி. 11,000க்கும் அதிகமான புதிய பேருந்துகள், மெட்ரோ ரயில் திட்டம் 500 கி. மீ. க்கு விரிவுபடுத்தப்படும்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யமுனை ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெண்கள் பாதுகாப்புக்கு ‘மொஹலா மார்ஷல்ஸ்’ அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லி மக்கள் சந்தித்து வரும் 10 பிரச்னைகளை பட்டியலிட்டு, அவற்றை தீர்ப்பதற்கான உத்தரவாதங்கள் அளிக்கப்படுகின்றன. இவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும்.

ஆனால், இது தேர்தல் அறிக்கை கிடையாது. அடுத்த 7-10 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’’ என்றார்.

நேற்று உத்தரவாத அட்டையை கெஜ்ரிவால் வெளியிட்ட நிலையில், புதுடெல்லி தொகுதியில் இன்று தனது  வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

அதேபோல், பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, அவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

.

மூலக்கதை