ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன், ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவிப்பு என்ற முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனைகளை கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அபாரமாக ஆடி அசத்தினர்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் விளாசினார். இதன்மூலம் கேப்டனாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்) அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை தோனியிடம்  இருந்து தட்டிப்பறித்தார். விராட் கோலி கேப்டனாக இதுவரை 199 இன்னிங்சில் பேட்டிங் செய்து 11,208 ரன்கள் குவித்துள்ளார். தோனி 330 இன்னிங்சில் 11,207 ரன்கள் எடுத்துள்ளார்.இதேபோல், கோலி 14 ரன்கள் எடுத்தபோது கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்த இலக்கை கோலி 82 ஆட்டங்களில் எடுத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் இந்தியாவின் தோனி (127 ஆட்டம்) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (131 ஆட்டம்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மூலக்கதை