பிரித்வி அதிரடியில் இந்தியா ஏ வெற்றி

தினகரன்  தினகரன்
பிரித்வி அதிரடியில் இந்தியா ஏ வெற்றி

லிங்கன்: நியூசிலாந்து லெவன் அணியுடனான 2வது பயிற்சி ஆட்டத்தில், இந்தியா ஏ அணி 12 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 49.2 ஓவரில் 372 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 150 ரன் (100 பந்து, 22 பவுண்டரி, 2 சிக்சர்), விஜய் ஷங்கர் 58, மயாங்க் அகர்வால், குருணல் பாண்டியா தலா 32 ரன் விளாசினர். கேப்டன் கில் 24, சூர்யகுமார் 26 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து லெவன் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன் எடுத்து தோற்றது. தொடக்க வீரர் ஜேக் பாய்ல் 130 ரன் (130 பந்து, 17 பவுண்டரி), பின் ஆலன் 87 ரன் (65 பந்து, 14 பவுண்டரி), கேப்டன் டாரில் மிட்செல் 41 ரன் எடுத்தனர். டேன் கிளீவர் 44 ரன், ஷிப்லி 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஏ அணி 2 பயிற்சி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளிடையே 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் (அதிகாரப்பூர்வமற்றது) நடைபெற உள்ளன. முதல் ஒருநாள் போட்டி லிங்கனில் நாளை மறுநாள் நடக்கிறது.

மூலக்கதை