படமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்

தினமலர்  தினமலர்
படமாகும் மும்பை பெண் டான் கங்குபாய்

பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அடுத்து இயக்க இருக்கும் படம் கங்குபாய் கதியாவாடி. நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்மாவத் படத்தை தயாரித்து, இசையமைத்து, எழுதி, இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது கங்குபாய் கதியாவாடி படத்தின் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்துக்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம், செப்., 11ல் படம் ரிலீசாகும் என்றும் தெரிவித்திருக்கிறது. கங்குபாய் கதியாவாடி படத்தின் நாயகியாக ஆலியா பட் நடிக்கிறார். எழுத்தாளர் ஹுசைன் சய்தி எழுதிய மாபியா குயின் என்ற புத்தகத்தில் இடம் பெற்ற கங்குபாய் பற்றிய கதையைத் தழுவி, இப்படம் எடுக்கப்படுவதாக, சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, மும்பை அவெஞ்சர்ஸ், ப்ளாக் ப்ரைடே புத்தகங்கள் இந்தியில் பான்டம் மற்றும் ப்ளாக் ப்ரைடே என்ற பெயரில் படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. தன்னுடைய எழுத்துகள் மூலம் மும்பை நிழல் உலக தாதாக்களை அடையாளம் காட்டிய, ஹுசைனின் முக்கியமான படைப்பு மாபியா குயின். கங்குபாய் கதியாவாடி என்ற மிகப் பெரிய பெண் தாதா, பல காலம் மும்பை மாபியா உலகில் எப்படி கோலோச்சினார் என்பதுதான், கங்குபாய் கதியாவாடி படத்தின் கதை.

இது குறித்து, சஞ்சய் லீலா பன்சாலி கூறியதாவது: கங்குபாய் -1939ல், குஜராத், காத்திர்வார் மாவட்டத்தில், பெற்றோருக்கு ஒரே மகளாய் பிறந்தார். தன்னுடைய 16 வயதில் காதல் கணவனை நம்பி, மும்பைக்கு திரைப்படங்களில் நடிக்கும் கனவுகளோடு வந்தார். ஆனால், அவரோ 5௦௦ ரூபாய்க்கு மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் கங்குபாயை விற்றுச் சென்றார். இனி திரும்பிச் சென்றால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என்று எண்ணி, சூழ்நிலையால் ஹீரா மண்டி பகுதியில், பாலியல் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார் கங்குபாய். போதைப் பொருட்களை சந்தைப்படுத்துவது, கூலிக்கு கொலைகள் செய்வது, குற்றவாளிகள் பதுங்க உதவி செய்வது என்று இருந்தவர், பின், மிகப் பெரிய லேடி டானாக உருவெடுத்தார். 6௦களில் மும்பை மாபியாவை, தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதும், ஹீரா மண்டி பகுதியில் வாழ்ந்த மற்ற பாலியல் தொழிலாளிகளுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக இருந்தார். அரசாங்கத்திடம், அவர்கள் நலம் காக்க முறையிட்டார். அதுமட்டுமல்ல; அவருடைய வாழ்க்கையில் நிறைய திருப்பங்களும் உள்ளன. இதையெல்லாம் அப்படியே வைத்துத்தான், கங்குபாய் கதியாவாடி என்ற படத்துக்கான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படம் - எதிர்பார்த்தபடியே படமாக்கப்படும். மிகுந்த பரபரப்போடு, செப்.,ரில் படம் ரிலீசாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மூலக்கதை