சென்னையில் காணும் பொங்கல் கோலாகலம் கடற்கரை, பூங்காக்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: குடும்பத்தோடு சென்று கோயில்களில் வழிபாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் காணும் பொங்கல் கோலாகலம் கடற்கரை, பூங்காக்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: குடும்பத்தோடு சென்று கோயில்களில் வழிபாடு

சென்னை: சென்னையில் காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மெரினா, பெசன்ட் நகர்,  திருவான்மியூர் கடற்கரைகளிலும், பொழுது போக்கு பூங்காக்களிலும் குவிந்தனர்.

மேலும் பலர் குடும்பத்தோடு சென்று ஆங்காங்குள்ள கோயில்களில்  வழிபாட்டில் ஈடுபட்டனர்.   பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. அப்பொது மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர்.

மறுநாளான  நேற்று விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன்  கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் ஆங்காங்குள்ள சுற்றுலா  தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  உள்ள கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா  பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து  கார், வேன், பஸ், பைக், ரயில்களிலும் பலர் படையெடுத்து வந்தனர்.

இதனால் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. மாநகரில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதாலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணித்ததாலும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். கடந்த ஆண்டு மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்ததாக கூறப்பட்டது.

அதே அளவுக்கு இன்றும் மக்கள்  கூடுவார்கள் என அதிகாரிகள் நம்புகின்றனர். இதையடுத்து குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார்  ஈடுபட்டுள்ளனர்.



கடற்கரைக்கு வந்த பலர், அங்குள்ள மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என பொழுதை  மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி  சாப்பிட்டனர்.

இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் விளையாடி  மகிழ்ந்தனர்.

மேலும் கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை முதல் ஏராளமானோர் கார், பைக்குகளில் கூட்டம் கூட்டமாக வந்தனர். அங்கு பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடத்தில் வனத்துறை அதிகாரிகள்  அறிவுறுத்தினர். பூங்காவில் ஏராளமான ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். மேலும் கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வன விலங்குகள், பறவைகளை  கண்டு ரசித்தனர்.

பிறகு அங்குள்ள மரங்களின் நிழலில் அமர்ந்து, உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை  மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.



முன்னதாக இன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வனத்துறை அதிகாரிகள்  செய்திருந்தனர். இதேபோல் செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள்  கூட்டம் அதிகமாக இருந்தது. திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும்  ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கடற்கரை, சுற்றுலாத்தலங்களை போலவே கோயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.   வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்ற மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

இவர்களின் வசதிக்காக  மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயணித்ததால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னையைப் போல் கோவை, திருச்சி, சேலம்,  ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள், அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை  கொண்டாடி மகிழ்ந்தனர். குற்றாலம், ஒக்கேனக்கல் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

காவிரி உள்ளிட்ட பல்வேறு  ஆறுகளிலும், அணைகளுக்கும் சென்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.


.

மூலக்கதை