அம்பத்தூர், திருநின்றவூரில் ஆசிட் குடித்து 2 பேர் பலி
அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, ராகவேந்திரா தெருவில் ஒரு தனியார் கம்பெனி உள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த கண்ணன் (56) என்பவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 11-ம் தேதி குடிபோதையில் இருந்த கண்ணன், கம்பெனியில் இருந்த ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கண்ணன் பரிதாபமாக பலியானார்.
மற்றொரு சம்பவம்: ஆவடி அடுத்த திருநின்றவூர், பெரிய காலனி, பள்ள தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.
கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா (24).
இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கடந்த 13-ம் தேதி அனிதா தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த அனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அனிதா பரிதாபமாக பலியானார்.