தோனிக்கு ‘நோ’ பி.சி.சி.ஐ., சம்பள பட்டியலில்... | ஜனவரி 16, 2020

தினமலர்  தினமலர்
தோனிக்கு ‘நோ’ பி.சி.சி.ஐ., சம்பள பட்டியலில்... | ஜனவரி 16, 2020

புதுடில்லி: பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து ‘சீனியர்’ தோனி நீக்கப்பட்டார். இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2019 அக்., முதல் 2020 செப்., வரையிலான 27 வீரர்கள் கொண்ட சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. கடந்த ஆண்டு ‘ஏ’ பிரிவில் ரூ. 5 கோடி பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘சீனியர்’ தோனி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2019, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பின், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார் தோனி. எதிர்கால திட்டம் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டும், ‘தோனி ஒருநாள் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார். வரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவதற்கு ஏற்ப, வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது,’ என தெரிவித்து வந்தார். தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் தோனி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதேபோல ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், கலீல் அகமதுவும் நீக்கப்பட்டனர். புதிய வரவு மயங்க் அகர்வால் ‘பி’ கிரேடில் இடம் பெற்றார். நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சகார், ஸ்ரேயாஸ் ஐயர் புதியதாக பட்டியலில் இடம் பிடித்தனர். ராகுல் ‘பி’ கிரேடில் இருந்து ‘ஏ’ கிரேடுக்கு உயர்த்தப்பட்டார்.

பட்டியல் விவரம்

‘கிரேடு ஏ+’ (ரூ. 7 கோடி): கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா

‘கிரேடு ஏ’ (ரூ. 5 கோடி): அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரகானே, லோகேஷ் ராகுல், தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பன்ட்.

‘கிரேடு பி’ (ரூ. 3 கோடி): சகா, உமேஷ் யாதவ், சகால், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால்.

‘கிரேடு சி’ (ரூ. 1 கோடி): கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சகார், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்.

 

ஏன் இப்படி

பி.சி.சி.ஐ., ஒப்பந்த விதிப்படி குறைந்தது 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது சீசனுக்கு ஏற்ப 3 ‘டுவென்டி–20’ ல் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தோனி, கடந்த ஆறு மாதங்களாக எவ்வித போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் பட்டியலில் பெயர் இடம் பெறாது என்ற விஷயத்தை, பி.சி.சி.ஐ., தரப்பில் இருந்து தோனியிடம் தெரிவித்த பிறகு தான் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானதாம். 

 

சகாப்தம் முடிகிறதா

‘சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனி 38. கடந்த 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் ஒருநாள் என இரு உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என, ஐ.சி.சி.,யின் மூன்று முக்கிய தொடர்களையும் வென்று தந்த உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமை பெற்றவர். 

90 டெஸ்ட் (4876 ரன்), 350 ஒருநாள் (10,773), 98 ‘டுவென்டி–20’ (1617) போட்டிகளில் பங்கேற்று, 17,266 ரன்கள் குவித்துள்ளார். 829 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று ஜார்க்கண்ட் ரஞ்சி அணி வீரர்களுடன் இணைந்து தோனி பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் தோனியை, ஒப்பந்த பட்டியலில் இருந்து பி.சி.சி.ஐ., நீக்கியதால், மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ஆனால், வரும் ஆசிய கோப்பை தொடரில் தோனி சில போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில் மீண்டும் சம்பள பட்டியலில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.

மூலக்கதை