ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை: நேர்முக தேர்வு மார்ச்சில் தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை: நேர்முக தேர்வு மார்ச்சில் தொடக்கம்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் 159 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு மார்ச்சில் தொடங்குகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ்  தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2019ம் ஆண்டுக்கானது) 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.



இவர்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூலை 12ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இதில் 11845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை  610 பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர்  20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது.

இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 159 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். டி. வைஷ்ணவி கூறியதாவது:
யுபிஎஸ்சி 2019ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 159 ேபர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 105 பேர்  சங்கர் ஐஏஎஸ் அகாடமியில்  பயின்றவர்கள். ஒட்டு மொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில்(சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம்) 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை