அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி சுதந்திர பறவைகளான ஹாரி - மேனன் தம்பதி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ‘கண்ணீர்’ அறிக்கை

தினகரன்  தினகரன்
அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி சுதந்திர பறவைகளான ஹாரி  மேனன் தம்பதி: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் ‘கண்ணீர்’ அறிக்கை

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு அந்நாட்டு ராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளதால், இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேனனும் இனி சுதந்திர பறவைகளாக இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. ஈரான் - அமெரிக்கா போர்ப் பதற்றம், ஆஸ்திரேலியா  காட்டுத்தீ, அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தியாவில் குடியுரிமை திருத்த  சட்டம், ஹாங்காங் விவகாரம் என, 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சர்வதேச  செய்திகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தனை  விஷயங்களுக்கு நடுவே இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பப் பிரச்னையும் உலக  மக்களால் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும்  அவரது மனைவியும் அமெரிக்க நடிகையுமான மேகன் ஆகிய இருவரும் அரச  குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த சில  வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு  இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் பெரும் கலக்கத்தையும், சர்ச்சையையும்  ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பத்திரிகைகள் இங்கிலாந்து அரசு குடும்ப  விவகாரங்களை பலவாறாக எழுதி வருகின்றன. அரச குடும்பத்தில் இருந்து  விலகுவதற்கான காரணமாக, தங்களுக்குச் சுதந்திரம் தேவைப்படுவதாகவும்,  இங்கிலாந்து ராணி மற்றும் அரசுக்குத் தாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம்  என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று  பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில்  ராணி எலிசபெத், ஹாரியின் தந்தை சார்லஸ், சகோதரர் வில்லியம்ஸ், இளவரசர்  ஹாரி உட்பட ராஜகுடும்பத்தைச் சேர்ந்த பல மூத்த மற்றும் முக்கிய  உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கூட்டத்தில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் கோரிக்கை ஏற்றுக்  கொள்ளப்படுமா? இந்த விஷயத்தில் ராணி எலிசபெத் என்ன முடிவெடுப்பார்? என  அறிந்துகொள்ள மொத்த இங்கிலாந்து மக்களும் பரபரப்பின் உச்சத்தில்  காத்திருந்தனர். இருந்தும் ஹாரி அரசக் குடும்பத்தை விட்டு விலகியதற்கு  உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.இங்கிலாந்து அரச  தம்பதியினருக்குக் கனடாவில் தனியுரிமை கிடைக்கும். அங்குள்ள ஊடகங்களும்  அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளாது. அதனால், ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி  இருக்க இவர்கள் கனடா செல்ல முடிவெடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இன்று இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர் விவகாரம் குறித்து ஒரு கனத்த மனதுடன் அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: அரச குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் ஆக்கபூர்வமாக இருந்தது. மேகனும் ஹாரியும் கனடா மற்றும் இங்கிலாந்தில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள். ஒரு இளம் குடும்பமாக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க ஹாரி மற்றும் மேகனின் விருப்பத்திற்கு எனது குடும்பமும் நானும் முற்றிலும் ஆதரவளிக்கிறோம். அரச குடும்பத்தின் முழுநேர உறுப்பினர்களாக இருக்க நாங்கள் அவர்களை விரும்பியிருந்தாலும், ஒரு குடும்பமாக இன்னும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம்; புரிந்துகொள்கிறோம். எனவே, அவர்கள் கனடாவில் பகுதிநேரமாக வாழ அரச குடும்பம் அனுமதிக்கிறது. அதேநேரம் அவர்களின்  உறவு ‘ஹவுஸ் ஆஃப் வின்ட்சர்’ (அரசு குடும்ப உறுப்பினர்களின் அரண்மனை) உடன் உறுதியாக பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ‘எங்களது உறவில் கடுமையான கஷ்டத்தை விவரிக்கும் வகையில், செய்தித்தாளில் அவதூறாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், அந்த செய்தியில் எதுவும் உண்மையில்லை. நாங்கள் இணைந்தே இருப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் செய்தித்தாள் பெயரிடப்படவில்லை என்றாலும், கொடுமைப்படுத்துதல் மனப்பான்மையால் ஹாரி மற்றும் மேகன் தள்ளப்பட்டதாக ஒரு ஆதாரத்தை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் லண்டன் முதல் பக்கக் கட்டுரையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை