வந்திருக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்துவது சந்தேகம் தான்: ஆளுங்கட்சி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வந்திருக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்துவது சந்தேகம் தான்: ஆளுங்கட்சி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: வந்திருக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்துவது சந்தேகம் தான் என்று மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் விழா திமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:ஆட்சியில் இருந்தாலும், இல்லை  என்றாலும்  மக்கள்  பணியாற்றுவதில் திமுகவிற்கு ஈடாக எந்தக்கட்சியும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த  அளவுக்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

அதில் எவ்வளவு பிரச்சனை?. தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றோம்.

உச்சநீதிமன்றத்திற்குச் சென்றோம். தேர்தலை முறையாக, நியாயமாக, இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றோம்.

திமுகவின் நியாயமான கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டு 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்த உத்தரவு போட்டது. ஆர். எஸ். பாரதியோ, இங்கிருக்கும் திமுகவினரோ அல்லது திமுகவோ தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் நிறுத்திவிட முடியுமா?.

நியாயம் இருந்ததை அறிந்து தான் உச்சநீதிமன்றம் தடைபோட்டது.

நினைத்துப் பாருங்கள். சிசிடிவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்க முடியுமா? முடியவே முடியாது.

அதற்கு நானே உதாரணம். அதிமுக ஆட்சியில் 2வது முறையாக  நான் மேயர் பதவிக்கு போட்டியிட்டேன்.

அதிமுக ஆட்சியில் என்னென்ன அக்கிரமம் நடந்தது. தோற்ற கவுன்சிலர்கள் எல்லாம் வெற்றி பெற்றார்கள்.

ஜெயித்தவர்களை தோற்கடித்தார்கள். அந்தச் சதி எல்லாம் நடைபெற்றது.

இப்போது அப்படி நடக்காது; சிசிடிவி கேமரா வந்து விட்டது. நீதிமன்றத்திற்கு நாம் போனதால் தான் இந்த உத்தரவு கிடைத்தது.

2வது முறை ஜெயலலிதா முதல்வராக வந்த பிறகு என்னைத் தோற்கடிக்க  எவ்வளவோ  முயற்சி  செய்தார்கள். அவற்றை எல்லாம் தாண்டி 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய நான், வெறும் 2,000  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை  ஏற்பட்டது.

அவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றன.

எதற்காகச் சொல்கிறேன்  என்றால், இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் ஊரகப்  பகுதிகளில் மட்டும் தான் தேர்தல் நடைபெற்றது.

இன்னும் நகராட்சி, பேரூராட்சி மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. நடந்திருந்தால்  நிச்சயமாக சென்னையில் நம்முடைய மேயர் தான் தற்போது கொடிகட்டி உட்கார்ந்திருக்ககூடிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

வந்திருக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் தேர்தலை நடத்துவார்களா  என்பது கேள்விக்குறி தான். எப்படியும் திமுக தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறது.

வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை முறையாக  நடத்துவோம். அது குறித்துக் கவலைப்பட  வேண்டிய அவசியமில்லை.

உள்ளாட்சி அமைப்பில் இன்றைக்கு ஊராட்சி கவுன்சிலராக இருந்தாலும், மாவட்டக் கவுன்சிலராக இருந்தாலும் வெற்றி பெற்றவர்களுடைய எண்ணிக்கை அதிமுகவை விட அதிகமாக தானே வந்தது.

ஒரு சீட்டு அதிகமாக இருந்தாலே, அவர்கள் தானே பெரும்பான்மை பெற்றவர்கள். ஆனால், அது வளர்பிறை; இது தேய்பிறை என்று விமர்சனம்  செய்கிறார்கள்.

எது வளர்பிறை? எது தேய்பிறை? இந்தச் சராசரி அறிவு கூட ஆளும் கட்சியில் இருக்கும் அமைச்சர்களுக்கு இல்லையா?. விரைவில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்.

அப்போது, இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வரும். அதில்  எந்த  மாற்றமும் இல்லை.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்வார்கள். தை பிறக்கப்போகிறது.

தை பிறந்தவுடன் வழி பிறக்கும்.

இவ்வாறு மு. க. ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை