பெங்களூருவின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் : ஆய்வில் தகவல்
பெங்களூரு: பெங்களூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பெங்களூரு போன்ற மாநகரங்கள் மற்றும் நகர பகுதியில் வாழும் மக்களின் உணவு பழக்கத்தில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிசா, பர்கர், ரசாயன கலவையுடன் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள், பாஸ்ட்புட் போன்றவை அதிகம் பயன்படுத்துவதால் இதுபோன்ற நோய்கள் தாக்குகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உணவுக்கு பதிலாக செயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெங்களூரு மாநகரில் மொத்தம் உள்ள 1.28 கோடி மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மூலம் தெரியவருகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு, டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள் ஆகியவற்றை சரியாக பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் நீரிழிவுக்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கவும் லோக்ஆயுக்தா போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.