வெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி

தினகரன்  தினகரன்
வெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி

பெங்களூரு: உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு முன் அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்தப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உறுதியளித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள முதல்வர் எடியூரப்பாவுக்கு அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜ ஆட்சி அமைய அடித்தளமாக இருந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதின் மூலம் தனது நன்றி உணர்வை காட்ட வேண்டும் என்பது முதல்வர் எடியூரப்பாவின் நோக்கமாக உள்ளது. அதனிப்படையில் தான், புதியதாக வெற்றி பெற்றவர்கள் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.கர்நாடக சட்டபேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 15 சதவீதம் பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்து கொள்ள முடியும். அதன்படி மாநிலத்தில் முதல்வர் உள்பட 34 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது முதல்வர் எடியூரப்பா, 3 துணைமுதல்வர்கள் உள்பட 17 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இன்னும் 17 பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்து கொள்ள வாய்ப்புள்ளது. அதில் புதியதாக வெற்றி பெற்றுள்ள 12 பேரை சேர்த்துக் கொண்டால் மீதி 5 இடங்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அதை பிடிக்க 20க்கும் மேற்பட்ட மூத்த எம்எல்ஏக்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது தேன்கூட்டில் கை வைத்த கதையாகி விடும் என்று அச்சத்தில் முதல்வர் மவுனம் காத்து வருகிறார். ஆனால் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு பல வழிகளில் நெருக்கடி முற்றி வருகிறது. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகிறார். அந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்தபின் அமைச்சரவையை விஸ்தரிக்கும் யோசனையில் இருந்தார். ஆனால் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வேறு வழியில்லாமல் அமைச்சரவையை விஸ்தரிக்–்க முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றதால், அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று (நேற்று) டெல்லி வரும்படி அழைத்திருந்தார். இடையில் வேறு நிகழ்ச்சி இருந்ததால், சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ஹுப்பள்ளியில் நடக்கும் ேதசிய குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் அமித்ஷாவுடன் கலந்தாலோசித்து அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது இறுதி செய்யப்படும். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டபேரவை இடைத்தேர்தலின்போது நான் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். பாஜ ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்கள் கண்டிப்பாக அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால் மத்திய அரசு மாநாட்டிற்கு ெசல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் செல்கிறேன். நான் வெளிநாடு செல்வதற்கு முன் அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்கும் என்றார்.

மூலக்கதை