குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடினால் ‘நாயைபோல சுட்டு தள்ளுவோம்’ ‘அப்படியே பொதைச்சுடுவோம்’ பாஜ தலைவர்களின் அநாகரீக பேச்சு

தினகரன்  தினகரன்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடினால் ‘நாயைபோல சுட்டு தள்ளுவோம்’ ‘அப்படியே பொதைச்சுடுவோம்’ பாஜ தலைவர்களின் அநாகரீக பேச்சு

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக பாஜ தலைவர்கள் அநாகரீகமாக பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் பாஜ சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே.வங்கத்தில் பாஜ தலைவர் திலீப் கோஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடியா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது: டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசானது துப்பாக்கிச்சூடு நடத்தவோ, தடியடி நடத்தவோ உத்தரவிடவில்லை. அவர்கள் ஓட்டுவங்கி என்பதால், பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவில்லை. ஆனால் உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் பாஜ அரசானது இதுபோன்றவர்களை நாய்களை போல சுட்டுத்தள்ளியது. அவர்கள் செய்தது சரியானது. அராஜகம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேசத்தில் சுடப்பட்டது போன்று இங்கும் சுடப்பட வேண்டும். அவர்கள் இங்கு வந்து அனைத்து வசதிகளையும் அனுபவித்தனர். பின்னர் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர். அது அவர்களின் அப்பன் வீட்டு மாநிலமா? இவ்வாறு அவர் பேசினார். திலீப் கோஷின் இந்த கருத்து சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் மற்றும் பாஜ தலைவர் பபுல் சுப்ரியோ தனது டிவிட்டர் பதிவில், “திலீப் கோஷ் கூறியதற்கும், ஒரு கட்சியாக பாஜவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  அவர் கூறியது அனைத்தும் அவரது சொந்த கற்பனைகள். உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் பாஜ அரசானது எந்த காரணத்துக்காகவும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. திலீப் கோஷ் கூறியது பொறுப்பற்ற பேச்சாகும்” என பதிவிட்டுள்ளார். இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் திலீப் கோஷின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலாளர் மற்றும் மேற்குவங்க அமைச்சர் பார்தா சட்டர்ஜி கூறுகையில், “திலீப் கோஷ் கூறியது பாஜவின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இது திலீப் கோஷின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. இது தான் பாஜவின் மனநிலை. எதிர்ப்பை அவர்கள் விரும்புவது கிடையாது” என்றார்.  இதேபோல் மார்க்சிஸ்ட் தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி கூறுகையில், “பாஜ தலைமையிலான மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என பாஜ கூறி வருகின்றது. உண்மை வெளியே வந்துவிட்டது. திலீப் கோஷ் உண்மைகளை வெளியே கொட்டிவிட்டார். சர்வாதிகார அரசை உருவாக்க பாஜ முயற்சிக்கிறது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது அதனை நோக்கிய ஒரு படியாகும்” என்றார். திலீப் கோஷ் பேச்சால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜ தலைவர் அநாகரீகமாக பேசி சர்ச்சையை எழுப்பி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாஜ தலைவரான ரகுராஜ் சிங் பேசுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களில் ஒரு சதவீதம் பேர் கிரிமினல்கள் மற்றும் ஊழல்வாதிகள். இவர்கள் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக முழக்கமிடுகின்றனர். உங்களை நான் உயிரோடு மண்ணில் புதைத்து விடுவேன். யோகியும், மோடியும் மனகலக்கமுற்றவர்கள் கிடையாது. யோகியும், மோடியும் நாட்டை நடத்துவார்கள் மற்றும் இதுபோன்றே நடத்துவார்கள்” என்றார். ரகுராஜ் சிங்கின் இந்த சர்ச்சை கருத்தை அடுத்து உடனடியாக பதிலளித்த பாஜ செய்தி தொடர்பாளர் சந்திரமோகன், ‘‘ரகுராஜ் சிங் அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கிடையாது. அவர் பேசியது அவரது சொந்த கருத்து’’ என்றார்.

மூலக்கதை