அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருப்பம்
மும்பை: ‘அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என்பதே இலக்கு. இந்த ஆண்டு அதற்கே முன்னுரிமை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து அணிகளின் கவனமும் இப்போட்டித் தொடரில்தான் உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும். அதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டுக்கான இலக்கு’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாஸ்திரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை வெற்றிகரமான ஆண்டை (2019) கடந்து வந்திருக்கிறோம்.
இந்த ஆண்டும் அதே போல் அமைய வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் நாம் எட்ட வேண்டியது இன்னமும் உள்ளது. குறிப்பாக அந்நிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும். இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவே இலக்காக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கேப்டன் விராட் கோஹ்லியும், சாஸ்திரியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டிகள்தான் உண்மையிலேயே சவாலானவை.
அதிலும் அந்நிய மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் பெறும் ஒவ்வொரு வெற்றியும், நமது அணியின் உண்மையான தரத்தை வெளிப்படுத்தும் என்று நான் கருதுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.