கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமங்களில் பாரபட்சம் பிசிசிஐ வருவாயில் கை வைக்கும் ஐசிசி: கைகோர்க்கும் ஆஸ்திேரலியா, இங்கிலாந்து வாரியம்
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி. சி. ஐ), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈ. சி. பி) ஆகியவை கூட்டாக இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ. சி. சி) எதிரான ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. அதாவது, சர்வதேச அமைப்பின் திருத்தப்பட்ட நிர்வாக அமைப்பு கொண்டுவந்த, நிதி மற்றும் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தை எதிர்க்கின்றன.
மேற்கண்ட இரண்டு வாரியங்களும், ஆஸ்திரேலியாவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனை ‘பிக் த்ரீ’ கூட்டணி என்கின்றனர்.
முன்னதாக, பி. சி. சி. ஐ மற்றும் ஈ. சி. பி. ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் லார்ட்ஸில் நடந்த சந்திப்பின் போது, ஐ. சி. சி விஷயங்களைப் பற்றி விவாதித்தன.
இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஐ. சி. சி. யில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பி. சி. சி. ஐ - ஈ. சி. சி போலவே, ஆஸ்திரேலியாவும் உணர்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) விரைவில் எங்களுடன் இருக்கும்.
ஜன. 14ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.
அதற்காக பி. சி. சி. ஐ தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் ஏர்ல் எடிங்க்ஸ் மற்றும் அவரது தூதுக்குழுவை சந்திப்பார்.
கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தின் போது, எட்டு ஆண்டுகளில் எட்டு முக்கிய நிகழ்வுகளை முன்மொழிந்தது. அதாவது, 2023 முதல் 2031 வரை அவர்களின் அடுத்த விளையாட்டு ஒளிபரப்பு உரிமைகளில், பிசிசிஐ மற்றும் ஈ. சி. பி, சி. ஏ. -வுக்கு சாதகமற்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனால், பி. சி. சி. ஐ-யின் திட்டமிடப்பட்ட வருவாய் 570 மில்லியன் டாலரிலிருந்து 400 மில்லியனுக்கு குறைந்துள்ளது. ஐ. சி. சி. யின் வருவாயில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கிறது.
இதேபோல், ஈ. சி. பி மற்றும் சி. ஏ ஆகிய வாரியங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால், மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து ஐ. சி. சி. -க்கு எதிரான முடிவை எடுத்துள்ளன’ என்றார்.