சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் மூலம் பல…
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் அரசுக்கு மீதமாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் டெல்லியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சமையல் எரிவாயு மானியத்தில் ஒரு பகுதி போலி இணைப்புகள் போன்ற வழிகளில் வீணானதாகவும் ஆனால் நேரடி மானியத் திட்டத்தால், வீணாகும் பணத்தில் 10 சதவிகிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். இத்திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்பம்தான் உதவியது என்றும் பிரதமர் தெரிவித்தார். இணையதள சேவைகளில் பாதுகாப்பு குறித்த அச்சம் உலகளவில் நிலவும் நிலையில் இதற்கு தீர்வு காண இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையினர் முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இதைச் செய்யத் தவறினால் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் களவு போகும் அச்சத்தால் மொபைல் ஃபோன்களை கூட பயன்படுத்த அஞ்சும் நிலை மக்களுக்கு ஏற்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்