துவக்கம்!குப்பையை வாங்க, விற்க புது இணைய சேவை...பலருக்கு வேலைவாய்ப்பு என கமிஷனர் தகவல்

தினமலர்  தினமலர்
துவக்கம்!குப்பையை வாங்க, விற்க புது இணைய சேவை...பலருக்கு வேலைவாய்ப்பு என கமிஷனர் தகவல்

சென்னை:மாநகராட்சியில், திடக்கழிவுகளில் இருந்து பெறப்படும் மறுபயன்பாடுள்ள பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும், இணையதள சேவை துவக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில், தினமும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், மறுபயன்பாடுள்ள பொருட்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்றின் அளவு குறித்து, பொதுமக்களும், மறுசுழற்சியாளர்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், www.madraswasteexchange.com என்ற இணையதள சேவை, மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சேவையின் பயன்பாட்டை துவக்கி வைத்து, கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:சென்னை மாநகராட்சியில், தினமும், 5,220 டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன. இதில், 1,083 டன் மக்கும் குப்பையில், உரம், உயிரி மீத்தேன், எரிவாயு கலன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.உலர் கழிவுகளான, மரக்கழிவுகள், தேங்காய் ஓடுகள் என, 400 டன் அளவிற்கு கையாளுவதற்காக, தனியார் மற்றும் பொது பங்களிப்பாளர்களுக்கு ஒப்பந்தம் வாயிலாக கொடுக்கப்படும்.மேலும், பிளாஸ்டிக்உட்பட மறுசுழற்சி பொருட்களை தரம் பிரித்து, மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை, எரியூட்டும் நிலையத்தில் கையாளப்படுகின்றன. இந்த மையத்தில், தினமும், 300 டன் கையாள முடியும். பொதுமக்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள், இந்த புதிய இணையத்தில் பதிவு செய்து, தங்களிடம் உள்ள, மறுபயன்பாடு உள்ள பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த சேவையை, இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி வாயிலாக பயன்படுத்தலாம். சேவையின் வாயிலாக, சென்னையில் உள்ள, பழைய இரும்பு, பேப்பர் வியாபாரிகள் அதிகளவில் பயனடைவர். பலருக்கு சுய வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுதல் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணை கமிஷனர் மதுசுதன்ரெட்டி, தலைமை பொறியாளர் மகேசன், மேற்பார்வை பொறியாளர் வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை