இன்று முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த ஜன. 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 540 சுங்கசாவடிகள் உள்ளன.

இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.   இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும்.

இதன் மூலம் காலநேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும்.

இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் கார்டு அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, வாகன உரிமையாளர்கள் லைசென்ஸ் நகல், ஆர்சிபுக், பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும்.

இந்த பாஸ்டேக் கார்டை பெறும் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சராசரியாக ரூ. 400 வரை கார்டில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரூ. 200க்கு கீழ் சென்றால் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.   தற்போது இந்த பாஸ்டேக் கார்டு ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கடக்கும் போது தானாக கட்டணத்தை வசூலித்து கொள்கிறது. இந்த நடைமுறை மிகவும் எளிதானது என்றாலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் பெரும்பாலான வாகன ஓட்டிகளால் பெற முடியவில்லை.

இதனால், கடந்த டிசம்பர் 1ம் தேதி பாஸ்டேக்  மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனாலும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 60 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று முதல் பாஸ்டேக் கட்டணம் வசூலிக்கும் முறையை கட்டாயமாக்கப்படவிருந்தது.

ஆனால், பலரும் ஸ்டிக்கர் வாங்காத நிலையில், அவர்கள் சுங்கச்சாடிகளில் இருமடங்கு அபராதம் தர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

அதே நேரத்தில் 25 சதவீதம் சுங்கச்சாவடிகளில் வழிபாதைகளில் பாஸ்டேக் முறையை மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

இந்த நிலையில், பாஸ்டேக் முறை இன்று அமல்படுத்தும் பட்சத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மேலும், 30 நாட்கள் கால அவகாசம் வழங்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, வரும் ஜனவரி 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய  தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. தற்போது வரை சுங்கவழிப்பாதைகளில் சிப் பொருத்தும் பணி நடக்கிறது.

மேலும்,  பாஸ்டேக் கார்டு பலர் வாங்க வேண்டியுள்ளது. எனவே தான் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாக வைக்கப்படும்.

அதாவது, பாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும் இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை