தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலை திரும்புகிறது: கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!

தினகரன்  தினகரன்
தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலை திரும்புகிறது: கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!

கவுகாத்தி: தொடர் போராட்டம் நடைபெற்று வந்த அசாம் மற்றும் திரிபுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி 5 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடியது. இந்த கலவரம் டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் கேரளாவிலும் பரவியது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை மற்றும் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பெல்டங்கா ரயில் நிலையத்திற்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், மூன்று நாட்கள் வன்முறைப் போராட்டங்களுக்குப் பின்னர் திரிபுராவில் இன்று அமைதி திரும்பியுள்ளது. ஆனால், இந்த அமைதி நிலை தொடர்ந்து நீடிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மூலக்கதை